வாலிபர் மீது நாட்டுவெடி வீசிய சிறுவன் உட்பட 4 பேர் கைது போலீசார் விசாரணை சாலையில் வெடிசத்தம் சம்பவத்தில் திடீர் திருப்பம்

திருவண்ணாமலை, மார்ச் 12: திருவண்ணாமலை அருகே சாலையில் திடீரென நாட்டு வெடி வெடித்த சம்பவத்தில் சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்விரோத தகராறில் வாலிபர் மீது நாட்டு வெடி வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தில் இருந்து சாவல்பூண்டி கிராமத்துக்கு செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த வெடிசத்தம் கேட்டது. ஆள் நடமாட்டம் குறைவான இந்த சாலையில் திடீரென வெடிசத்தம் கேட்டதுடன் அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது.

எனவே, அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, சாலையில் வெடித்து சிதறிய 2 நாட்டு வெடிகள் மட்டும் இருந்தன. இதுகுறித்து, தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து சிதறிக்கிடந்த நாட்டுவெடிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதோடு, அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 2 பைக்குகளில் 4 நபர்கள் அந்த பகுதியில் கடந்து சென்ற சில நிமிடங்களில் வெடிசத்தம் ஏற்பட்டது தெரியவந்தது. எனவே, இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், முன் விரோதம் காரணமாக தன் மீது 4 பேர் கொண்ட கும்பல் நாட்டுவெடி வீசி கொலை செய்ய முயற்சி செய்ததாக புகார் அளித்தார். மேலும், கீழ்செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும், தனக்கும் கடன் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்ததாகவும், இந்த சம்பவத்தில் அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். அதன் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சென்னையை சேர்ந்த தீபன்(19), தினேஷ்(19) மற்றும் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய 4 பேர் நாட்டுவெடிகளை வீசி மணிகண்டனை கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. மேலும், அதிர்ஷ்டவசமாக நாட்டுவெடி மணிகண்டன் மீது படாமல் அவருடைய பைக் மீதும் தரையிலும் சிதறி விழுந்துள்ளன. இதனால், மணிகண்டன் உயிர் பிழைத்துள்ளார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அருண்குமார், தீபன், தினேஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 4 நபர்களையும் நேற்று இரவு திருவண்ணாமலை மேற்கு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post வாலிபர் மீது நாட்டுவெடி வீசிய சிறுவன் உட்பட 4 பேர் கைது போலீசார் விசாரணை சாலையில் வெடிசத்தம் சம்பவத்தில் திடீர் திருப்பம் appeared first on Dinakaran.

Related Stories: