பூதப்பாண்டியில் கடத்தப்பட்ட பள்ளி மாணவியை விட்டுச்சென்ற காதலனின் பெற்றோர்

*கைது செய்ய தனிப்படை தீவிரம்

நாகர்கோவில் : பூதப்பாண்டியில் கடத்தப்பட்ட பள்ளி மாணவியை வாலிபரின் பெற்றோரே அவரது வீட்டின் அருகில் விட்டு சென்றனர். குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, தனது படிப்பிற்காக பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து 12ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறைக்காக கீரிப்பாறை அருகே உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். ஆரல்வாய்மொழி பாரதிநகரை சேர்ந்த தொழிலாளி பிரகாஷ் (23) என்பவரின் பாட்டி வீடு மாணவியின் பாட்டி வீடு அருகே உள்ளது. பிரகாஷ் பாட்டி வீட்டிற்கு சென்ற போது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது, பிரகாஷ் மாணவியிடம், செல்போன் நம்பர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடி ஆகியவற்றை வாங்கியுள்ளார். பின்னர், அடிக்கடி மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் சாட் செய்து பழகிய பிரகாஷ், தனது காதல் வலையில் மாணவியை வீழ்த்தியுள்ளார். அடிக்கடி தனது பைக்கில், வெளியே தனியாக அழைத்து சென்றுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி பள்ளி சென்ற மாணவி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், தங்கள் மகளை காணவில்லை என பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து, போலீசார் விசாரணையில், மாணவியை கடத்தி சென்றது பிரகாஷ் என்பது தெரியவந்தது.மாணவியை, திருப்பூர் அழைத்து சென்ற பிரகாஷ், பெற்றோர் உதவியுடன் அங்கு தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். மாணவி மாயமான வழக்கு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த பிரகாஷின் பெற்றோர், திருப்பூர் சென்று மாணவியை அழைத்து கொண்டு, நேற்று முன் தினம் பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தில் மாணவியின் வீட்டு முன்பு விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். பிரகாசும் தலைமறைவாகி விட்டார். மாணவியை ஆசை வார்த்தை கூறி பிரகாஷ் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். தற்போது, பிரகாசை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

தற்கொலை செய்த கள்ளக்காதலி

கடந்த ஒன்றரை ஆண்டுகள் முன்பு ராதாபுரம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆன இளம்பெண்ணுடன் பிரகாஷிற்கு பழக்கம் எற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணை, அவரது குழந்தையுடன் அழைத்துக் கொண்டு ஆரல்வாய்மொழியில் குடும்பம் நடத்தியுள்ளார்.

அப்போது பிரகாஷின் கொடுமை தாங்காமல், அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பிரகாஷ், இதுபோல், பல பெண்களை கடத்தி வந்து திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி அவர்களை கொடுமைகள் செய்து, துரத்தி விடுவது வழக்கம் என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post பூதப்பாண்டியில் கடத்தப்பட்ட பள்ளி மாணவியை விட்டுச்சென்ற காதலனின் பெற்றோர் appeared first on Dinakaran.

Related Stories: