நெசவுத்தொழிலாளியை சரமாரி வெட்டிய நண்பன் போலீசார் விசாரணை செய்யாறு அருகே மிளகாய் பொடி தூவி

செய்யாறு, மார்ச் 6: செய்யாறு அருகே மிளகாய் பொடி தூவி நெசவுத்தொழிலாளியை சரமாரி வெட்டிய நண்பனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெள்ளக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(40), நெசவுதொழிலாளி. அதே கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(33), பெட்டிக்கடை வைத்துள்ளார். இருவரும் நண்பர்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மணிகண்டன் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மோகன்ராஜ் தன்னை பைக்கில் ஏற்றிக்கொண்டு வீட்டில் விட்டு விடும்படி கூறியுள்ளார். தொடர்ந்து, மணிகண்டன், மோகன்ராஜை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

சிறிது தூரம் சென்றபோது திடீரென மோகன்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து மணிகண்டன் கண்ணில் தூவியுள்ளார். பின்னர், கத்தியை எடுத்து அவரை சரமாரி வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், தலை, தோள்பட்டையில் வெட்டு விழுந்து நிலைதடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் பின்னர் அலறியடித்தபடி வீட்டிற்கு ஓடினார். இருப்பினும், மோகன்ராஜ் விடாமல் துரத்தியபடி ஓடி வந்துள்ளார். இதை கண்ட மணிகண்டனின் மனைவி தரணி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதை கண்ட மோகன்ராஜ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர், ரத்த காயங்களுடன் துடிதுடித்த மணிகண்டனை அவரது உறவினர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மணிகண்டன் மனைவி தரணி தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப் பதிந்து மோகன்ராஜை நேற்று கைது செய்தார். மேலும், மணிகண்டனை வெட்டியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். நண்பன் மீது மிளகாய் பொடி தூவி சரமாரி வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post நெசவுத்தொழிலாளியை சரமாரி வெட்டிய நண்பன் போலீசார் விசாரணை செய்யாறு அருகே மிளகாய் பொடி தூவி appeared first on Dinakaran.

Related Stories: