இதை தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, உலகெங்கிலும் தமிழர்களுக்கெல்லாம் தமிழினத் தலைவர், இலக்கியத் துறையைச் சார்ந்தவர்களுக்கெல்லாம் முத்தமிழறிஞர், கலையுலகத்தினருக்கு என்றும் கலைஞர், தமிழ்நாட்டின் தலைவர்களுக்கெல்லாம் தலைவர், இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி, “என் பாதை, சுயமரியாதைப் பாதை, தமிழின நலன் காக்கும் பாதை, தமிழ் நெறி காக்கும் பாதை, பெரியாரின் பாதை, அண்ணாவின் பாதை – அறவழிப் பாதை – அமைதிப் பாதை, ஜனநாயகப் பாதை இதில் பயணித்தால் மரணமே வரும் எனப் பயமுறுத்தினாலும், அந்தப் பாதையிலிருந்து மாற மாட்டேன்” என இறுதிவரை உறுதியோடு வாழ்ந்தவர்தான் கலைஞர்.
80 ஆண்டு பொதுவாழ்க்கை, 70 ஆண்டுகள் திரைத்துறை, 70 ஆண்டுகள் பத்திரிகையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுகள் திமுக தலைவர் என்று வாழ்ந்த காலம் முழுவதும் வரலாறாக வாழ்ந்தவர் கலைஞர். அதேபோல், நின்ற தேர்தலில் எல்லாம் வென்றவர், இந்தியாவில் இப்படி ஒருவர் இருந்தது கிடையாது; இனி ஒருவர் அவர் இடத்தை அரசியல் களத்தில் பிடிக்க முடியாது என்று போற்றத்தக்கப் பெருமைக்குரியவர். தாய் தமிழ்நாட்டை உருவாக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப் படங்களுடன் அண்ணா நினைவிட வளாகத்தில் கலைஞருக்கும் நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதேபோல் இந்த சதுக்கத்தில், “ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்” எனும் வாசகம் கலைஞரின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது. கலைஞர் சதுக்கத்தின் முன்னே இருபுறமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழ்ச் செம்மொழி என ஒன்றிய அரசு ஏற்ற முடிவை தெரிவித்துப் பாராட்டி, கலைஞருக்கு எழுதிய கடிதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், சதுக்கத்தின் பின்புறம் கலைஞரின் புன்னகை பூத்த முகம் பொன்னிறத்தில் மிளிரும் வண்ணமும் சுற்றிலும் மின்விளக்குகள் விண்மீன்களாக ஒளிரும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமல்லாது, கலைஞரின் சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில், கலைஞர் உலகம் எனும் பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கலைஞர் நிர்மாணித்த திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்றுவாரியம் முதலியவை படங்களாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தும், தமிழ்த்தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும் என்று கலைஞர் கடந்த 1970ம் ஆண்டு நவ.23ம் தேதி பிறப்பித்த அரசாணையும், தமிழ்த் தாய் வாழ்த்து மாநிலப் பாடல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு டிச.17ம் தேதி பிறப்பித்த அரசாணையும் அவர்களின் படங்களுடன் இடம்பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தி.க. தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், பாமக சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பொதுப்பணித் துறை செயலாளர் சந்தர மோகன், பல்வேறு அரசு துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
The post சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பொலிவுடன் அண்ணா, கலைஞர் நினைவிடம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பொதுமக்கள் பார்வைக்காக அர்ப்பணித்தார் appeared first on Dinakaran.