நாளை துவங்க இருந்த நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நாகை: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி துவங்கப்பட்டது. செரியபாணி என்று பெயரிடப்பட்ட இந்த கப்பலில் கட்டணமாக ரூ.6,500 நிர்ணயம் செய்யப்பட்டு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ரூ.7,670 வசூலிக்கப்பட்டது. இயற்கை சீற்றம் காரணமாக அக்டோபர் 20ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து வரும் 13ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக பலர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

இதற்காக அந்தமானில் சிவகங்கை என்ற கப்பல் தயாரிக்கப்பட்டு சென்னை துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் வந்தது. அங்குள்ள கப்பல் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு உள்ளிட்ட சில அரசு சார்ந்த பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் நாகை துறைமுகத்துக்கு இன்று சிவகங்கை கப்பல் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களால் இன்று கப்பல் வராது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் காரணமாகவும், தரமான கப்பல் வருகையாலும் திட்டமிட்டபடி, நாகை-இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு நாளை முதல் கப்பல் சேவையை துவங்க முடியவில்லை. இதனால் வரும் 17ம் தேதி முதல் கப்பல் சேவையை துவங்க முடிவு செய்துள்ளோம். இதனால் நாளை முதல் 16ம் தேதி வரை கப்பலில் பயணம் செய்த பதிவுகளை வரும் 17ம் தேதி மாற்றியுள்ளோம். எனவே ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் வரும் 17ம் தேதி அல்லது பின்னர் விரும்பிய தேதிகளில் பயணிக்கலாம். இல்லாவிட்டால் customer.care@sailindsri.com என்ற இணையதள முகவரியை தொடர்பு கொண்டு கப்பல் முன்பதிவு செய்த கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

17ம் தேதி காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல் மதியம் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைக்கு சென்றடையும். அதேபோல் இலங்கையில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு நாகை துறைமுகத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடையும். இதற்கு கட்டணமாக அமெரிக்க டாலர் 75 (இந்திய கட்டணம் ரூ.4,800) மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டியுன் சேர்த்து ரூ.5,662 ஆகும். கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர் www.sailindsri.com அல்லது md@indsri.ferry.co.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நாளை துவங்க இருந்த நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: