இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கின்ற வகையில், ஒரு மிகுந்த எழுச்சியான மாநாட்டை, கடந்த ஜனவரி 21ம் தேதி சேலத்தில் திமுக இளைஞர் அணி நடத்தியதன் மூலம் அந்த வெற்றிக்காக உழைத்த பாடுபட்ட உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். குறிப்பாக இந்த வாய்ப்பை இளைஞர் அணிக்கு அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கும், தலைமை கழக நிர்வாகிகள் அனைவருக்கம் நன்றி. வெற்றி மாநாடாக்கிய மாவட்ட செயலாளர்களின் உழைப்பை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.
நாடு முடிந்தது, கிளம்பினோம் என்று இல்லாமல் அதில் நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்களை, தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் விதமாக தீர்மான விளக்க பொதுக் கூட்டங்களையும் நீங்கள் சிறப்பாக நடத்தி வருகிறீர்கள். அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் வர இருக்கிறது. எனவே தெருமுனை கூட்டங்களை நடத்துங்கள். தலைவரின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகள், ஒன்றிய அரசு செய்த துரோகங்களை தெருமுனை கூட்டங்களில் பேசினால் பிரசாரத்திற்கு அது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இது மிக முக்கியமான தேர்தல். மாநாட்டின் வெற்றி 50 சதவீதம் தான். மீதமுள்ள 50 சதவீத வெற்றி என்பது நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 கண்டிப்பாக ஜெயித்தாக வேண்டும். அப்போதுதான் மாநாடு 100 சதவீத வெற்றியை அடையும். இந்த தேர்தல் சாதாரணமானது கிடையாது. பிரதமரை தேர்ந்தெடுக்கிற தேர்தல் என அலட்சியமாக இருந்து விட கூடாது. தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க, இந்திய ஒன்றியத்தை காப்பாற்றுவதற்கான மிக, மிக முக்கியமான தேர்தல். நமக்கு சாதகமான ஒன்றிய அரசு அமைந்தால்தான் நம் நாட்டுக்கும், நம் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும்.
நம் உரிமைகளை மீட்க முடியும். அதன் மூலம் 2026ல் மீண்டும் நாம் ஆட்சி பெறுவதை மீண்டும் நாம் உறுதி செய்தாக வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள், மனக்கசப்புகள், மனமாச்சரியங்களை விடுத்து ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். இளைஞர் அணி நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் நீங்கள் சொல்கின்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள தயாராக களத்தில் இருக்கிறார்கள். கலைஞரின் வளர்ப்புகள் நாம். திமுக தலைவரின் வழித்தோன்றல் நாம். ஆகவே நாடும் நமதே நாற்பதும் நமதே என்கிற வகையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை நம் தலைவரின் கரங்களில் சமர்ப்பிக்க வேண்டும். 2021ல் அடிமைகளை வீழ்த்தி, தமிழ்நாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடியலை தந்தார். இப்போது வருகிற தேர்தலில் அடிமைகளை விரட்டுவோம். 2024ம் ஆண்டு தேர்தலில் அடிமைகளின் முதலாளிகள் ஓனர்ஸ், ஏஜென்சியையும் பாசிஸ்ட்டுகளையும் வீழ்த்தி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நாம்தான் தரவுள்ளோம். பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்பு செயலாளர்கள் தாயகம் கவி, ஆஸ்டின், தயாநிதி மாறன் எம்பி, இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ஜோயல், இன்பா.ரகு, இளையராஜா, மாலிக், பிரகாஷ், பிரபு, ஜி.பி.ராஜா, சீனிவாசன், ஆனந்தகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் எபினேசர், பிரபாகர் ராஜா, பிரகாஷ், ராஜா அன்பழகன், லோகேஷ் ஆர்.டி.மதன்குமார் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
The post பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல்தான் என அலட்சியமாக இருக்க கூடாது; தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க, இந்தியாவை காப்பாற்றுவதற்கான முக்கியமான தேர்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.