மணல் குவாரி விவகாரம் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கூட்டாட்சி முறையை ஒடுக்கப் பார்க்கிறது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு காரசார வாதம்

புதுடெல்லி: மணல் குவாரி விவகாரத்தில் கூட்டாட்சி முறையை ஒன்றிய அரசு ஒடுக்க பார்ப்பதாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மணல் குவாரிகளிலும் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து பத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநில நீர்வளத்துறையின் மூத்த அதிகாரிகள், ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக மணல் குவாரி உரிமையாளர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “ அமலாகத்துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.எம்.திரிவேதி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர் தங்கள் வாதத்தில், “இந்த விவகாரத்தில் சம்பந்தம் இல்லாமல் வழக்கு பதிவு செய்து கூட்டாட்சி முறையை அமலாக்கத்துறையினர் ஒடுக்கப் பார்க்கின்றனர்.

எந்த வழக்கிலும் தொடர்பில்லாத அதிகாரிகளுக்கு எதற்காக சம்மன் அனுப்ப வேண்டும். அவர்கள் ஏன் அதற்கு பதிலளிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. ஆனால் அதற்குள் அமலாக்கத்துறை தரப்பில் அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விரிவான வாதங்களை எங்களது தரப்பில் முன்வைக்க வேண்டும் என்பதால் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி பி.எம்.திரிவேதி, “விசாரணை அமைப்புகள் சம்மன் அனுப்பினால் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டியது தானே?. மேலும் அதிகாரிகள் வழக்கு தொடராமல் உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடர்ந்தது ஏன் என்பது புரியவில்லை. இருப்பினும் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை தற்போது ஏற்கிறோம் என தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

The post மணல் குவாரி விவகாரம் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கூட்டாட்சி முறையை ஒடுக்கப் பார்க்கிறது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு காரசார வாதம் appeared first on Dinakaran.

Related Stories: