ஆதார் அட்டைகளை முடக்குகிறது ஒன்றிய அரசு: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

சூரி: மேற்குவங்க அரசின் நலத்திட்ட பயன்களை மக்கள் பெறாமல் தடுக்க ஒன்றிய பாஜ அரசு சதி செய்வதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் திரிணாமுல் அரசின் நலத்திட்ட பயன்களை மக்கள் பெறாமல் தடுக்க பாஜ அரசு சதி செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

பிர்பூம் மாவட்டத்தில் நேற்று நடந்த பொதுவிநியோக நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள், மேற்குவங்கத்தின் பல மாவட்டங்களில் ஆதார் அட்டைகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன. மோடி தலைமையிலான பாஜ அரசு ஆதார் அட்டைகளை நீக்கி வருகிறது. மக்களவை தேர்தலுக்கு முன் மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை மக்கள் பெறுவதை தடுக்க பாஜ இந்த சதியை செய்கிறது. ஆனால் ஆதார் அட்டை இல்லா விட்டாலும் திட்ட பயனாளிகளுக்கு திரிணாமுல் அரசு தொடர்ந்து வங்கியில் பணம் செலுத்தும். ஒருவரும் பாதிக்கப்பட மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அரியானா, பஞ்சாப் விவசாயிகள் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்டு போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு தலை வணங்குகிறேன். அவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன்” என்று கூறினார்.

The post ஆதார் அட்டைகளை முடக்குகிறது ஒன்றிய அரசு: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: