பண்ணாரி அம்மன் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற காட்டு யானை கூட்டம். சமூக வலை தளங்களில் வீடியோ வைரல்.

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம்.

தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவ தொடங்கியுள்ளதால் காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறுகின்றன. இந்த நிலையில் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டமாக தனது குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றன.

யானைகள் சாலையை கடந்து செல்வதை கண்ட வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்து வாகனங்களை சாலையில் நிறுத்தினர். காட்டு யானைகள் கூட்டமாக சாலையை கடந்து சென்ற பின் வாகனங்கள் புறப்பட்டு சென்றன. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்படுகிறது. வனப்பகுதி சாலையில் பயணிக்கும் வாகனங்கள் மித வேகத்தில் பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

The post பண்ணாரி அம்மன் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற காட்டு யானை கூட்டம். சமூக வலை தளங்களில் வீடியோ வைரல். appeared first on Dinakaran.

Related Stories: