ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாடு 291/4 இந்திரஜித் 122*

சேலம்: பஞ்சாப் அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 291 ரன் குவித்துள்ளது. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங்கை தேர்வு செய்தது. சுரேஷ் லோகேஷ்வர் 10, நாராயண் ஜெகதீசன் 22 ரன்னில் வெளியேறினர். அடுத்து வந்த பிரதோஷ் ரஞ்சன்பால் 20, முகமது அலி 27 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். உணவு இடைவேளையின்போது, தமிழ்நாடு 38 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 109 ரன் எடுத்து திணறியது.

இந்த நிலையில், பாபா இந்திரஜித் – விஜய் சங்கர் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திரஜித் சதம் விளாசி அசத்த, விஜய் சங்கர் அரை சதம் அடித்தார். முதல் நாள் முடிவில் (90 ஓவர்) தமிழ்நாடு 4 விக்கெட் இழப்புக்கு 291 ரன் குவித்துள்ளது. இந்திரஜித் 122 ரன், விஜய்சங்கர் 85 ரன்னுடன் களத்தில் உள்ளனர். பஞ்சாப் தரப்பில் சுக்விந்தர்சிங் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்திரஜித் நேற்று 70 ரன் எடுத்தபோது, முதல்தர கிரிக்கெட்டில் 5,000 ரன் என்ற சாதனை மைல்கல்லை எட்டினார். விஜய் சங்கர் தனது 50வது ரஞ்சி போட்டியில் அரை சதத்துடன் 2,500 ரன் கடந்தார். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாடு 291/4 இந்திரஜித் 122* appeared first on Dinakaran.

Related Stories: