கும்மிடிப்பூண்டி அருகே கடை உரிமையாளரை மிரட்டி ரூ.25 ஆயிரம் பறிப்பு: 3 பேருக்கு போலீசார் வலை

கும்மிடிப்பூண்டி: புதுப்பேட்டை பகுதியில் காயலாங்கடை கடை உரிமையாளரை மிரட்டி ரூ.25 ஆயிரம் பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் புதுப்பேட்டை பகுதியில் மகேஸ்வரன் (32) என்பவர் சில ஆண்டுகளாக காயலாங்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் பல பகுதிகளில் இருந்து திருட்டுத்தனமாக கொண்டுவரப்படும் இரும்பு, காப்பர் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகேஸ்வரன் கடைக்குள் 3 பேர் நுழைந்தனர். பின்னர் மாதந்தோறும் மாமூல் தர வேண்டுமென மகேஸ்வரனை மிரட்டியதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கல்லாவில் இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை 3 பேரும் பறித்துக்கொண்டு, மகேஸ்வரனை அடித்தும் கொலை மிரட்டல் விடுத்து தப்பித்து ஓடிவிட்டனர். இதுகுறித்து கடை உரிமையாளர் மகேஸ்வரன் கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆதாரங்களாக வைத்து வழக்கறிஞர் மூலம் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதன் அடிப்படையில், விசாரணை நடத்தியபோது, கடைக்குள் புகுந்தவர்கள் சிறுபுழல்பேட்டை பகுதியைச் சேர்ந்த பழனிராஜ் (34), மணிகண்டன் (24), நரேஷ் (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கும்மிடிப்பூண்டி அருகே கடை உரிமையாளரை மிரட்டி ரூ.25 ஆயிரம் பறிப்பு: 3 பேருக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.

Related Stories: