தேசிய அளவில் பதக்கங்கள் வென்ற தமிழரசிக்கு உயர் ரக தரத்திலான சைக்கிள் வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் இன்று (13.02.2024) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 19.02.2024 முதல் 28.02.2024 வரை மலேஷியா, கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 2024ம் ஆண்டிற்கான காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள செல்வி. அ. சர்வானிகாக்கு விமான கட்டணம், தங்கும் இடம் மற்றும் போட்டிக்கான நுழைவு கட்டணம் ஆகியவற்றிற்கான செலவினத் தொகையாக ரூ.1,78,720/-க்கான காசோலையினையும், தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடத்தப்பட உள்ள குதிரையேற்றம் போட்டி நடத்துவதற்காக ரூ. 5,00,000/-க்கான காசோலையினை நிதியுதவியாக வழங்கினார்.

மேலும், தேசிய அளவில் பதக்கங்கள் வென்ற பாரா தடகள விளையாட்டு வீராங்கனை செல்வி. இ. கலைச்செல்வி அவர்களுக்கு சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கு ரூ. 8,24,439/- செலவினத்தில் சர்வதேச தரத்திலான புதிய சக்கர நாற்காலி மற்றும் தேசிய அளவில் பதக்கங்கள் வென்ற செல்வி. ர. தமிழரசி அவர்களுக்கு ரூ. 16,16,700/- செலவினத்தில் உயர் ரக தரத்திலான சைக்கிள் (Carbon Track Bike) ஆகியவற்றை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார். இம்மொத்தத் தொகை “TN Champions Foundation“ அறக்கட்டளை நிதியில் இருந்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தேசிய அளவில் பதக்கங்கள் வென்ற தமிழரசிக்கு உயர் ரக தரத்திலான சைக்கிள் வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: