தனித்து விடப்பட்ட பாஜக சிறிய கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியை அமைப்போம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். அதுவும் சிறிய கட்சிகள் கூட பாஜகவுடன் கூட்டணி வைக்க இதுவரை முழுமையாக சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை பிற்பகலில் சென்னை வருகிறார். சென்னை வரும் அவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்க உள்ளார்.
தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்திக்க ஜே.பி.நட்டா திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்புக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் ஆகிய 5 பேர் மட்டுமே சம்மதம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டது. பெரிய கட்சிகளான பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் ஜே.பி.நட்டா சந்திப்ைப புறக்கணித்து உள்ளனர். அது மட்டுமல்லாமல் கடந்த முறை கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் சந்திப்பை புறக்கணிக்க உள்ளார். பாமக, தேமுதிக, புதிய தமிழகம் தலைவர்களுடன் தமிழக பாஜக தலைவர்களை தொடர்பு கொண்டு பேச முயன்றனர்.
ஆனால் அதற்கு 3 கட்சிகளின் தலைவர்களும் பிடி கொடுக்கவில்லை. அவர்கள் சந்திப்பதை தவிர்த்து விட்டனர். இதனால், எதிர்பார்த்த பெரிய கட்சி தலைவர்கள் வராததால், சிறிய கட்சிகளின் தலைவர்கள் மட்டும் ஜே.பி.நட்டாவை சந்திப்பது பாஜக கூட்டணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் 5 பேர் மட்டுமே சந்திக்க வாய்ப்பு உருவாகியுள்ளதைப் பார்த்து ஜே.பி.நட்டாவும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் அவர்களை மட்டுமே சந்தித்துப் பேசுகிறார். மேலும், சென்னை வரும் ஜே.பி.நட்டா நாளை மாலை வடசென்னை மின்ட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
The post நாளை சென்னை வரும் ஜே.பி.நட்டாவை சந்திக்க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மறுப்பு: பெரிய கட்சி தலைவர்கள் புறக்கணிப்பால் பாஜக அதிர்ச்சி appeared first on Dinakaran.