ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் தை மாத பிரதோஷ விழா: பக்தர்கள் தரிசனம்

ஊத்துக்கோட்டை, பிப். 8: ஊத்துக்கோட்டை அருகே சுருட்டபள்ளி, வடதில்லை சிவன் கோயில்களில் தை மாத பிரதோஷ விழா நடைபெற்றது. ஊத்துக்கோட்டை அருகே சுருட்டபள்ளி கிராமத்தில் புகழ் பெற்ற  பள்ளிகொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலை விநாயகர், வால்மீகீஸ்வரர், மரகதாம்பிகா, தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை, பள்ளி கொண்டீஸ்வரர் மற்றும் சர்வ மங்களா தேவி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து,  பள்ளி கொண்டீஸ்வரருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

பின்னர் மாலை 4 மணி முதல் 6 மணிவரை வால்மீகீஸ்வரர் எதிரே உள்ள நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து, அருகம்புல், வில்வ இலை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பிறகு பார்வதியுடன் சிவன் கோயில் வளாகத்தில் உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதேபோல் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வடதில்லை பாபஹரேஸ்வரர், காரணியில் உள்ள காரணீஸ்வரர் மற்றும் பெரியபாளையம் நம்பாலீஸ்வரர், ஐமுக்தீஸ்வரர் ஆகிய கோயில்களில் நந்திக்கு பால், தயிர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

The post ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் தை மாத பிரதோஷ விழா: பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: