கரந்தமலை பகுதியில் மழையில்லை அய்யனார் அருவியில் நீர்வரத்து குறைந்தது

நத்தம், பிப். 5: கரந்தமலையின் நீர்ப்பிடிப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், அங்குள்ள அய்யனார் அருவியில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சின்ன மீரான் குளம், பீபீ குளம், அய்யா குளம், காக்காகுளம், ஏழுமடைக் கண்மாய் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன. அருகில் உள்ள கரந்தமலை, மொட்டைமலை, பூலான்மலை, செம்புளிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர், விரிச்சலாறு, சம்பையாறு, திருமணிமுத்தாறு ஆகிய காட்டாறுகள் வாயிலாக பெருக்கெடுத்து மேற்கண்ட கண்மாய்களை வந்தடையும்.

இந்நிலையில், இப்பகுதிகளில் இந்தாண்டு போதிய அளவில் மழை பெய்யாததால், நீரோடைகள் மற்றும் நீர் நிலைகளில் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையில்லாததால், கரந்தமலை பகுதியில் உள்ள அய்யனார் அருவியில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘கோடை வெப்பம் கடுமையாக இருந்தால் இப்பகுதியில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வப்போது கோடைமழை பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கும்’’ என்றனர்.

The post கரந்தமலை பகுதியில் மழையில்லை அய்யனார் அருவியில் நீர்வரத்து குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: