சிங்கம்புணரி அருகே முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

சிங்கம்புணரி, பிப். 3: சிங்கம்புணரி அருகே கேசம்பட்டியில், ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா 24 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நடைபெற்றது. கேசம்பட்டியில் உள்ள ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பின்பு கோயில் புனரமைப்பு பணிகள் நடந்தன. இதையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, ஜனவரி 30ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்றுவரை நான்கு கால யாக பூஜைகள் மற்றும் வாஸ்து பூஜை செய்யப்பட்டு காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித நீரை சுமந்து கோபுர கலசங்களை அடைந்தனர்.

பின்னர் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து முத்துமாரி அம்மன், சித்தி விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், மகாலெட்சுமி, சரஸ்வதி, காலபைரவர், நவக்கிரகம், பெரியகருப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் கேசம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post சிங்கம்புணரி அருகே முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: