மெரினாவில் இன்று குடியரசு தின கொண்டாட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றுகிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது. மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை எதிரே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்குகிறார். விழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில் நிலையங்கள், கோயில்கள், ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று, சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை நகர் முழுவதும் 7500 காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பிற்காக கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் 1,250 ரயில்வே போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த பின்னர் தான் அனுமதிக்கின்றனர்.
மேலும், மாதவரம், துரைப்பாக்கம், நீலாங்கரை, திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டு 2 நாட்கள் சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post மெரினாவில் இன்று குடியரசு தின கொண்டாட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றுகிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: