ராமர் கோயில் விழாவுக்காக விடுமுறை வங்கி முன் காத்திருந்த முதியவர் மயங்கி சாவு

ஏற்காடு: ராமர் கோயில் விழாவுக்காக அரைநாள் விடுமுறை அளித்திருந்த நிலையில், வங்கி முன் காத்திருந்த முதியவர் திடீர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு நேற்று அரைநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், சேலம் மாவட்டம் ஏற்காடு டவுன் பகுதியில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கும் நேற்று அரைநாள் விடுப்பு விடப்பட்டிருந்தது.

இதனை அறியாமல் ஏற்காடு மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் வங்கியில் திரண்டனர். திங்கட்கிழமை என்பதால், பல்வேறு பண பரிவர்த்தனைக்காக கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கு சிறிய முட்டுச்சந்துக்குள் ஏற்காடு கொண்டையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (58) என்பவரும் வரிசையில் நின்றார். காலை 9 மணி முதல் நண்பகல் வரையிலும் காத்திருந்த பழனிசாமி, திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அங்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதியவரை பரிசோதித்தனர். அப்போது, அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உறவினர்கள் உடலை வீட்டுக்கு எடுத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ராமர் கோயில் விழாவுக்காக விடுமுறை வங்கி முன் காத்திருந்த முதியவர் மயங்கி சாவு appeared first on Dinakaran.

Related Stories: