உரிமையாளர் கதறி அழுதார் சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கோரி சாலை மறியல்

திருச்சி, ஜன.20: திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஓட்டல் தொழிலாளி சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்ககோரி உறவினர்கள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். திருச்சி திருவெறும்பூர் சர்க்கார்பாளையத்தை சேர்ந்த ஓட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக வேலை செய்துவருபவர் விக்னேஷ் (24). இவர் கடந்த11ம் தேதி இரவு வேலை முடிந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கல்லணைக்கு பிரியும் சஞ்சீவிநகர் பகுதியில், தனது இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சிமெண்ட் ஏற்றி வந்த லாரியில் அடிபட்டு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், விக்னேஷின் உறவினர்கள், சர்க்கார்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கல்லணைக்கு பிரியும் இடத்தில் சுரங்கப்பாதை அமைக்ககோரி நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்டிஓ பார்த்திபன் மற்றும் தாசில்தார் லோகநாதன் ஆகியோர் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு விக்னேஷ் உடலை எடுத்துக்கொண்டு சென்றனர். இந்த மறியல் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post உரிமையாளர் கதறி அழுதார் சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கோரி சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: