அங்கீகாரம் இல்லாமல் மின்னணு கழிவுகளை கையாளுபவர்களுக்கு அபராதம்: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

 

சிவகங்கை, ஜன. 19: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், ஒன்றிய அரசின் மின்னனு கழிவு (மேலாண்மை) விதிகள் 2016 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்த விதியின்படி, அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவுகளை பிரித்தெடுப்போர், மின்கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவு புதுப்பிப்பாளர்களால் மட்டுமே மின் கழிவுகளைச் சேகரித்து செயலாக்க முடியும்.

மேலும், நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்கள் மின் கழிவுகளை சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவுகளை பிரித்தெடுப்போர், மின்-கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கைவிடப்பட்ட மின்-கழிவு பொருட்களைச் சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர்கள் அல்லது மின்-கழிவுகளை மறுசுழற்சி செய்பவருக்கு அனுப்ப வேண்டும்.

விதிகள் மீறப்பட்டால் மின் பொருள் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மின் கழிவு இடமாற்றம் செய்வோர், பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்வோர் ஆகியோருக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள், ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அல்லது மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்குப் பிறகு செயல்பட வேண்டும். மின்-கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்பவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். பிரித்தெடுத்தல் மற்றும் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளின் விபரங்கள் வாரியத்தின் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அங்கீகாரம் இல்லாமல் மின்னணு கழிவுகளை கையாளுபவர்களுக்கு அபராதம்: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: