ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இருந்து விலகிய கிரிக்கெட் வீரர் அம்பதிராயுடு ஜனசேனா கட்சியில் இணைகிறார்: பவன்கல்யாணுடன் சந்திப்பு

திருமலை: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கிரிக்கெட் வீரர் அம்பதிராயுடு, நடிகர் பவன்கல்யாணை சந்தித்தார். இந்த சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். எனவே அவர் ஜனசேனா கட்சியில் இணைவார் என்று தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற அம்பதிராயுடு, ஆந்திர அரசியலில் ஈடுபட திட்டமிட்டார். இதற்காக அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான ஜெகன்மோகனை கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். ஆனால் ஓரிரு நாளிலேயே திடீரென அக்கட்சியில் இருந்து விலகுவதாக அம்பதிராயுடு அறிவித்தார்.

இந்நிலையில் நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன்கல்யாணை நேற்று அம்பதிராயுடு சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: தூய்மையான நோக்கத்துடனும், இதயத்துடனும் ஆந்திர மக்களுக்கு சேவை செய்யவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். இதற்காக நான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். எனது எண்ணத்தை நிறைவேற்ற முடியும் என நம்பினேன். சில காரணங்களால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உடன் சென்றால் எனது கனவு நிறைவேறாது. எனது சித்தாந்தம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் சித்தாந்தங்கள் ஒன்றாக இல்லை என்பதை தெரிந்து கொண்டேன்.

எனவே அரசியலில் இருந்து விலக முடிவு செய்தேன். எனது நலம் விரும்பிகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பவன்கல்யாண் அண்ணாவின் சித்தாந்தங்களை புரிந்துகொள்வதற்காக ஒருமுறை அவரை சந்திக்கும்படி கேட்டுக்கொண்டனர். நான் பவன் அண்ணாவை சந்தித்து, வாழ்க்கை மற்றும் அரசியலை பற்றி விவாதித்து, அவரைப் புரிந்துகொள்வதில் நிறைய நேரம் செலவிட்டேன். அவருடைய சித்தாந்தமும் பார்வையும் என்னுடையதை போலவே இருப்பதாகச் சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

அவரைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது கிரிக்கெட் கடமைகளுக்காக துபாய்க்கு புறப்படுகிறேன். நான் எப்போதும் இங்குதான் (ஆந்திராவில்) இருப்பேன். ஆந்திர மக்களுக்காக துணையாக நிற்பேன்.இவ்வாறு பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தொடர்ந்து அம்பதிராயுடு ஜனசேனா கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அல்லது தேர்தலுக்கு பிறகு எம்.எல்.சி.யாக தேர்தெடுக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

The post ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இருந்து விலகிய கிரிக்கெட் வீரர் அம்பதிராயுடு ஜனசேனா கட்சியில் இணைகிறார்: பவன்கல்யாணுடன் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: