கண்மாயில் நீர் திறக்கக்கோரி பொதுமக்கள் திடீர் தர்ணா

ராஜபாளையம், ஜன. 9: ராஜபாளையம் அருகே கண்மாய் தண்ணீர் திறக்கக்கோரி பொதுமக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் கண்மாய்க்கு, வாகைக்குளம் மற்றும் கருங்குளம் கண்மாயில் இருந்து நேரடி கால்வாய் வசதி உள்ளது. சமீபத்திய கனமழை காரணமாக, கீழராஜகுலராமன் கண்மாய்க்கு அதிக தண்ணீர் வருகிறது.

இதனால் வெளியேறும் உபரி நீர், அம்மன் கோயில்பட்டி சாலையின் தரைப்பாலத்தை மூழ்கடித்துள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைபட்டுள்ளதால், அம்மன் கோயில்பட்டி, கம்மாப்பட்டி, நத்தம்பட்டி, ஜமீன்நத்தம் பட்டியில் வசிக்கும் பொதுமக்கள் சத்திரப்பட்டி வரை வந்து 12 கி.மீ சுற்றிக்கொண்டு கீழராஜகுலராமன் சென்று வருகின்றனர்.

இதனால் கண்மாயின் மடையை திறந்து விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அதிகாரிகள் ஏற்கவில்லை. இதையடுத்து பொதுமக்கள் கலிங்கல் பகுதியில் நேற்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மதிமுக எம்எல்ஏ ரகுராமனும் பங்கேற்றார். இந்நிலையில் வெம்பக்கோட்டை வட்டாட்சியர் முத்து பாண்டீஸ்வரி முன்னிலையில் கண்மாயின் 4 மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

The post கண்மாயில் நீர் திறக்கக்கோரி பொதுமக்கள் திடீர் தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: