சட்டவிரோத நிலக்கரி சுரங்க அனுமதி வழக்கு: ஜார்க்கண்ட் முதல்வரின் ஆலோசகர் உள்பட 3 பேருக்கு ஈடி சம்மன்

புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்க அனுமதி கொடுத்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஜார்க்கண்ட் சமூகநலத்துறை முன்னாள் இயக்குநரும், ராஞ்சியின் முன்னாள் ஆணையருமான ஐஏஎஸ் அதிகாரி சாவி ராஜன் உள்பட 14 பேர்அமலாக்கத்துறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத சுரங்க அனுமதி, பணப்பரிமாற்ற வழக்குகள் தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 7 முறை சம்மன் அனுப்பி உள்ளது.

இதனிடையே கடந்த 3ம் தேதி முதல்வர் சோரனின் ஊடக பிரிவு ஆலோசகர் பிந்து என்ற அபிஷேக் பிரசாத், சாஹிப்கஞ்ச் மாவட்ட இணைஆணையர் ராம் நிவாஸ் யாதவ், சாஹிப்கஞ்ச் மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர் ராஜேந்திர துபே உள்பட 13 பேருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்நிலையில் ஜனவரி 11ம் தேதி ராம் நிவாஸ் யாதவும், 16ம் தேதி அபிஷேக் பிராசாத்தும், பிநோத் சிங் என்ற நபர் 11ம் தேதியும் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

The post சட்டவிரோத நிலக்கரி சுரங்க அனுமதி வழக்கு: ஜார்க்கண்ட் முதல்வரின் ஆலோசகர் உள்பட 3 பேருக்கு ஈடி சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: