சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 20 ஆண்டு சிறை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு வந்தவாசி அருகே விளையாடிக்கொண்டிருந்த

திருவண்ணாமலை, ஜன.6: வந்தவாசி அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மேல்பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் சரத் என்கிற மனோகரன்(23). பேக்கரி கடை தொழிலாளி. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அக்டேபார் 3ம் தேதி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியிடம், மனோகரன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து, வந்தவாசி மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். தொடர்ந்து, சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். மருத்துவ பரிசோதனையில், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதியானது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் சரத் என்கிற மனோகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் சரத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹2 ஆயிரம் அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். அதை தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சரத் என்கிற மனோகரனை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 20 ஆண்டு சிறை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு வந்தவாசி அருகே விளையாடிக்கொண்டிருந்த appeared first on Dinakaran.

Related Stories: