தி.மலை கார்த்திகை தீப விழாவுக்கு நெய் காணிக்கை செலுத்தியவர்களுக்கு நாளை மறுநாள் முதல் தீப மை விநியோகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்துக்கு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, நாளை மறுதினம் முதல் தீப மை பிரசாதம் வழங்கப்பட உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த நவம்பர் 26ம்தேதி கார்த்திகை தீபதிருவிழா நடந்தது. அன்று மாலை 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. கடந்த 6ம்தேதி வரை மலை உச்சியில் மகா தீபம் காட்சியளித்தது. பின்னர் மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீபச்சுடர் பிரசாதம் (தீப மை), கடந்த 27ம் தேதி நடந்த ஆருத்ரா தரிசனத்தின்போது, சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தீப விழாவுக்கு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வழங்குவதற்கான ஏற்பாட்டில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தீப மை மற்றும் விபூதி, குங்குமம் அடங்கிய பிரசாத பொட்டலங்களை ‘பேக்கிங்’ செய்யும் பணி கோயிலில் நடந்து வருகிறது. நெய் காணிக்கை செலுத்தியதற்கான ரசீதுகளை கோயில் நிர்வாக அலுவலகத்தில் காண்பித்து, தீப மை பெற்றுக்கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிளி கோபுரம் அருகே தீப மை வழங்கப்பட உள்ளது. இப்பணிகள் நாளை மறுதினம் (2ம்தேதி) முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தி.மலை கார்த்திகை தீப விழாவுக்கு நெய் காணிக்கை செலுத்தியவர்களுக்கு நாளை மறுநாள் முதல் தீப மை விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: