சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் மர்ம பொருள் வெடித்து லாரி டிரைவர் பலி

சங்ககிரி: சேலம் அருகே சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் மர்ம பொருள் வெடித்து மேற்கூரை சிதறியதில் லாரி டிரைவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். சேலம் மாவட்டம் சங்ககிரி டவுன் பகுதியில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, இன்ஸ்பெக்டர் உள்பட 20 பேர் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை போலீஸ் ஸ்டேஷனை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணிகளில் சங்ககிரி மலையடிவாரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான நியாமத்துல்லா (47), அவரது நண்பர்கள் இப்ராஹிம் (25) மற்றும் பால்வாய் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார்(30) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். சேகரமான கழிவு பொருட்களை மாலை 4 மணியளவில் ஸ்டேஷன் ஓரத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டி தீ வைத்து விட்டு 3 பேரும் அங்கு நின்று கொண்டிருந்தனர்.

ஒரு வழக்கு சம்பந்தமாக வந்திருந்த பவானி தேவபுரத்தைச் சேர்ந்த பரத்(25) என்பவரும் போலீஸ் ஸ்டேஷன் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, தீயில் இருந்த மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்த பொருள் ஸ்டேஷன் வரவேற்பறையின் மேற்கூரை மீது விழுந்தது. இதில், தகரத்தால் ஆன மேற்கூரை பிய்த்துக் கொண்டு, ஸ்டேஷன் முன்பகுதியில் நின்றிருந்த நியாமத்துல்லா, பரத் ஆகியோரின் மீது பாய்ந்தது. இதில், தொடை கிழிந்து இருவரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி நியாமத்துல்லா உயிரிழந்தார். பரத்துக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த தகவலின்பேரில், எஸ்பி அருண் கபிலன், ஏடிஎஸ்பி கண்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சேலத்தில் இருந்து தடயவியல் நிபுணர் செந்தில் மற்றும் குழுவினர் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர். குப்பை தீயில் எரிந்த நிலையில் இருந்த குழல் வடிவ வெடிபொருளை கைப்பற்றி சேகரித்து சென்றார். மேலும், வெடிக்கும் பொருள் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து குப்பைக்கு சென்றதா, அல்லது குப்பையில் வெடிக்கும் பொருட்களை மர்ம நபர்கள் போட்டுச் சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் மர்ம பொருள் வெடித்து லாரி டிரைவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: