ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன் டிச. 30ல் மோடியின் பிரமாண்ட பேரணி: அயோத்தி நகர ஆணையர் தகவல்

அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன் வரும் 30ம் தேதி பிரதமர் மோடியின் பிரமாண்ட பேரணி நடக்கவுள்ளதாக அயோத்தி ஆணையர் தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.

அதேநேரம் ஜனவரி 1ம் தேதி முதல் ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாடும் வகையிலான பிரசாரத்தை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது, நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்களுக்கு சென்று அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா செய்தியை கொண்டு சேர்க்க பாஜக முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அயோத்தி நகர ஆணையர் கவுரவ் தயாள், குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘வரும் 30ம் தேதி பிரதமர் மோடி அயோத்திக்கு வருகிறார்.

விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை திறந்து வைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் வரை நடக்கும் பிரமாண்ட ரோடு ஷோவில் பிரதமர் பங்கேற்கிறார். தொடர்ந்து நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஜனவரி 21 மற்றும் 22ம் தேதிகளில் ராமர் கோயில் குடமுழுக்கு நடப்பதால், அன்றைய தினம் பொது மக்கள் தரிசனம் இருக்காது. அதன்பின் ஜனவரி 23ம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனம் தொடங்கும். தினமும் சுமார் 50,000-55,000 பேர் அயோத்திக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பிரயாக்ராஜ், கோரக்பூர், வாரணாசி போன்ற மாவட்டங்களில் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் பிரபலங்கள் தங்கவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

The post ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன் டிச. 30ல் மோடியின் பிரமாண்ட பேரணி: அயோத்தி நகர ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: