கோரிக்கையை ஏற்காவிட்டால் பொங்கலுக்கு முன்பு தொடர் வேலைநிறுத்தம்: போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவிப்பு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக, பாமக, நாம் தமிழர் மற்றும் தேமுதிக உள்ளிட்ட 32 போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. பின்னர் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன் அளித்த பேட்டி: ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பண பலன்கள் அனைத்தும் உடனடியாக கொடுக்கப்பட வேண்டும். அரசு பணியாளராக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எங்கள் கோரிக்கையை அரசிடம் தெரிவிப்போம். அடுத்த 21 நாட்களில் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றால் 32 தொழிற்சங்கங்களை சேர்ந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் எடுக்கப்படாததால் கடும் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. பாமக, தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தற்போது அரசியலில் எந்த கூட்டணியிலும் இல்லாத நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களில் மட்டும் கூட்டணி அமைத்து போராட்டம் அறிவித்துள்ளோம் என்றார்.

The post கோரிக்கையை ஏற்காவிட்டால் பொங்கலுக்கு முன்பு தொடர் வேலைநிறுத்தம்: போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: