சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: லீலா பேலஸில் டிச.15ம் தேதி தொடக்கம்

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்-2023 போட்டி, லீலா பேலஸில் டிச.15 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து எஸ்டிஏடி வெளியிட்ட அறிக்கை விவரம்: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்-2023 போட்டி, சென்னை லீலா பேலஸில் இம்மாதம் 15ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறும். இப்போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு தலா 7 ரவுண்ட்-ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாடுவார்கள். மொத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த கிராண்ட் மாஸ்டர்களான டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி போன்ற வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பாக அமையும். மேலும், சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள் பர்ஹாம் மக்சூட்லூ, ஹரிகிருஷ்ணா, லெவோன் அரோனியன், பாவெல் எல்ஜனோவ், அலெக்சாண்டர் ப்ரெட்கே, மற்றும் ஸ்ஜுகிரோவ் சனான் போன்ற வீரர்களும் பங்கேற்க உள்ளனர். செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது. தற்போது இந்தியாவில் உள்ள கிராண்ட்மாஸ்டர்களில் மூன்றில் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, பிரக்ஞானந்தா, டி.குகேஷ் மற்றும் சமீபத்திய கிராண்ட்மாஸ்டர் வைஷாலி போன்ற வீரர்களுடன் தொடர்கிறது.

The post சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: லீலா பேலஸில் டிச.15ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: