கோஸ் பயிர்களை துவம்சம் செய்த யானை கூட்டம்

தேன்கனிக்கோட்டை, டிச.3: தேன்கனிக்கோட்டை அருகே கிராமங்களில் புகுந்து முட்டைகோஸ் பயிர்களை யானைகள் நாசப்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதி நொகனூர் காப்புக்காட்டில் 50 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது நொகனூர், தாவரக்கரை உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள், சாப்ரனப்பள்ளி அருகே உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்தன.

பின்னர், அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த முட்டைகோஸ், தக்காளி, ரோஜா உள்ளிட்ட பயிர்களை துவம்சம் செய்தன. மேலும், சொட்டு நீர் பாசன குழாய்களையும் சேதப்படுத்தி விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தன. தொடர்ந்து யானைகளால் பயிர் சேதமடைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே, யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோஸ் பயிர்களை துவம்சம் செய்த யானை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: