ஈரோடு தினசரி மார்கெட்டில் காய்கறி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

 

ஈரோடு, டிச.3: ஈரோடு தினசரி காய்கறி மார்கெட்டுக்கு நேற்று காய்கறி வரத்து சற்று அதிகரித்ததால் விலை குறைந்து காணப்பட்டது. ஈரோடு நேதாஜி காய்கறி மார்கெட்டில் நிரந்தர, தற்காலிக காய்கறி, பழக்கடைகள், 800க்கும் மேற்பட்டவை உள்ளன. இங்கு தாளவாடி, ஊட்டி, திண்டுக்கல், ஒசூர், தர்மபுரி, ஒட்டன்சத்திரம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் காய்கறி வரத்தாகிறது. வழக்கமாக 500 முதல் 800 டன் அளவுக்கு காய்கறி, பழங்கள் வரத்தாகும். கடந்த சில வாரமாக வரத்து குறைந்த நிலையில் நேற்று 650 டன்னுக்கு மேல் காய்கறி வரத்தானது.

கடந்த மாதம் முகூர்த்தம் அதிகமாக இருந்ததாலும், ஐயப்ப சீசன் துவக்கம், மழை போன்ற காரணத்தால் காய்கறி வரத்து சற்று குறைந்தது. இதனால் இஞ்சி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் உட்பட பல காய்கறி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் விலை குறைய தொடங்கி உள்ளது. ஆனால், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகியவை கிலோ ஒன்றுக்கு ரூ.10 வரை உயர்ந்து விற்பனையானது.

அதேநேரம் வெண்டை ரூ.70ல் இருந்து ரூ.45க்கும், கருப்பு அவரை ரூ.140ல் இருந்து ரூ.100க்கும், கேரட் ரூ.70லிருந்து ரூ.45 ஆகவும் குறைந்து காணப்பட்டது. இதேபோல், சுரைக்காய் ரூ.30, சேனை ரூ.50, பீர்க்கன் ரூ.50, கத்திரி ரூ.60, பாகை ரூ.60, புடலை ரூ.40, முள்ளங்கி ரூ.35, முருங்கை ரூ.70, பட்டை அவரை ரூ.70, குடைமிளகாய் ரூ.60, மிளகாய் ரூ.35, கொத்தவரை ரூ.30, கோஸ் ரூ.20, பீட்ரூட் ரூ.50, பீன்ஸ் ரூ.60, பூசணி ரூ.20, காளிபிளவர் ரூ.30க்கு விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர்.

The post ஈரோடு தினசரி மார்கெட்டில் காய்கறி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு appeared first on Dinakaran.

Related Stories: