புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த பேரூராட்சிகளின் இயக்குனர்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேரூராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், புழல் ஏரியில் நீர் இருப்பு முழு கொள்ளளவினை எட்டியுள்ளாதால் ஏரியின் தற்போதைய நீரின் கொள்ளளவு மற்றும் தற்போது திறந்துவிடப்பட்டுள்ள நீரின் கொள்ளளவு குறித்த விவரங்களையும், நீர் திறப்பினால் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள எந்தெந்த பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும் பொதுப்பணித்துறை பொறியாளர் மற்றும் செயல் அலுவலரிடம் கேட்டறிந்தார்.

மழையினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள தாழ்வு பகுதியான வள்ளலார் நகர் நரிக்குறவர் குடியிருப்பு பகுதிகளில் மழையினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடம் நேரில் கேட்டறிந்தார். மேலும் நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் வார்டு எண்.5, வேணுகோபால்சாமி கோயில் தெருவில் மேற்கொள்ளப்பட்ட சிமெண்ட் சாலை பணியின் தரத்தினை ஆய்வு செய்தார்.

மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்ட வாளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவினை தரம் பிரித்தல் மற்றும் உரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெயக்குமார், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், பேரூராட்சி மன்ற தலைவர் தமிழரசி குமார், துணை தலைவர் விப்ரநாராயணன், கொசஸ்தலையாறு உதவி கோட்ட பொறியாளர் கௌரிசங்கர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த பேரூராட்சிகளின் இயக்குனர் appeared first on Dinakaran.

Related Stories: