மழைக்கு விடுமுறை அளிக்காததை கண்டித்து பள்ளி மாணவிகள் திடீர் ஆர்ப்பாட்டம்: ஆசிரியர்கள் சமரசம்; திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் மழைக்கு விடுமுறை அளிக்காததை கண்டித்து பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து நேற்றும் கனமழை பெய்யும் என்ற நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்ற அறிவிப்பை வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, திருக்கழுக்குன்றத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மழையில் நனைந்தபடி பள்ளிக்கு வந்தனர். பின்னர், அருகாமையில் உள்ள மற்ற மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டநிலையில், இங்கு விடுமுறை அளிக்காததால் இப்படி மழையில் நனைந்தபடி பள்ளிக்கு வர வேண்டியுள்ளதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென பள்ளியின் முகப்பு வாயில் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடனே பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானம் செய்ததின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். மாணவிகளின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post மழைக்கு விடுமுறை அளிக்காததை கண்டித்து பள்ளி மாணவிகள் திடீர் ஆர்ப்பாட்டம்: ஆசிரியர்கள் சமரசம்; திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: