திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமைச்சர்கள் ரகுபதி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கோ.சி.மணி, குழந்தைவேலுவுக்கு எதிராக தொடுத்த சொத்துக்குவிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 1996 – 2001 கால கட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அப்போதைய அமைச்சர்களாக இருந்த ரகுபதி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கோ.சி.மணி மற்றும் குழந்தைவேலு ஆகியோர் மீது சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

கீழமை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்கள் மீது தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகம் மற்றும் ரவிசந்திரன் ஆகியோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறையும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும், அமைச்சர்கள் மீது போடப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.

அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், ஆறுமுகம், ரவிசந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்கள். இந்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள், பி.ஆர்.கவாய், நரசிம்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராகி இருந்த வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் குமரன் ஆகியோர் இந்த வழக்கு என்பது பல ஆண்டுகளுக்கு காலதாமதமாக தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், காலதாமதமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கின்ற ஆறுமுகம் மற்றும் ரவிசந்திரன் ஆகியோருக்கு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்த எந்த முகாந்திரமும் இல்லை. வழக்கை விசாரிப்பதற்கும் முகாந்திரம் இல்லை என்று தெரிவித்து அமைச்சர்களுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: