பச்சையப்பன் கல்லூரி அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: வாலிபர் உயிர்தப்பினார்

சென்னை: கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதில் காரை ஓட்டி வந்த வாலிபர் உயிர்தப்பினார். சென்னை சூளை பட்டியல் பிளாசா பகுதியை சேர்ந்தவர் அங்கேஷ் (28). இவர், தனது சொந்த ஊரான மதுரைக்கு நேற்று காலை 5 மணிக்கு புறப்பட்டு, ஈவெரா நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே சென்றபோது, திடீரென காரின் முன்பக்கத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனே காரை நிறுத்த அங்கேஷ் முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் காரின் முன்பக்கம் மளமளவென தீ பரவியது. ஒரு வழியாக காரை நிறுத்திவிட்டு அங்கேஷ் காரில் இருந்து கீழே இறங்கி தப்பினார். அப்போது போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வினோத் மற்றும் ஜானகிராமன் ஆகியோர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், கீழ்ப்பாக்கம் பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காரின் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டது தெரியந்துள்ளது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ஈவெரா நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

The post பச்சையப்பன் கல்லூரி அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: வாலிபர் உயிர்தப்பினார் appeared first on Dinakaran.

Related Stories: