ராமேஸ்வரம் : இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர். அவர்களிடம் மரைன் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.இலங்கை, யாழ்ப்பாணம் தொல்புரத்தை அடுத்த சுழிபுரம் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் நேற்று அதிகாலை படகு மூலம், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார், கடற்கரையில் நின்றிருந்த அவர்களிடம் விசாரணை செய்தனர். இதில், அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த நாகராசா (43), அவரது மனைவி வணிந்தினி (38), இவர்களது மகன்கள் அஜந்தன் (18), அனோஜன் (13) மற்றும் 9 வயது மகன், 4 வயது மகள், அஜந்தனின் மனைவி கிசாலினி (17) என்பது தெரிய வந்தது.
இவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு தலைமன்னார் கடற்கரைக்கு வந்து, அங்கிருந்து படகு மூலம் தனுஷ்கோடி வந்ததாகவும், படகிற்கு கட்டணமாக ரூ.2 லட்சம் கொடுத்ததாகவும், படகோட்டிகள் அரிச்சல்முனை கடற்கரையில் இறக்கிவிட்டு இலங்கைக்கு திரும்ப சென்றதாகவும் தெரிவித்தனர்.
அவர்களின் உடைமைகளை சோதனை செய்த போலீசார், 7 பேரையும் மண்டபம் மரைன் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். முழுமையான விசாரணை முடிந்து அகதிகளாக பதிவு செய்யப்பட்டவுடன் 7 பேரும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
The post இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் வருகை appeared first on Dinakaran.