தொழிலதிபர், கான்ட்ராக்டர் வீடுகளில் இ.டி. சோதனை

திண்டுக்கல்: பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது முறையாக சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் ரத்தினம். இவர் திண்டுக்கல், புதுக்கோட்டையில் கல்வி நிறுவனம், மணல் குவாரி, ரியல் எஸ்டேட் தொழில், வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த செப்.12ம் தேதி அமலாக்கத்துறையினர், திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் ரத்தினம் வீடு, அலுவலகம் மற்றும் ஹனீபா நகரில் உள்ள ரத்தினத்தின் மைத்துனர் கோவிந்தன் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் அமலாக்கத்துறையின் 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரண்டாவது முறையாக ரத்தினம் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர் காலை 10 மணிக்கு துவங்கிய சோதனை மதியம் 3 மணி வரை நீடித்தது. சோதனையின்போது ரத்தினம் மற்றும் அவரது 2 மகன்களும் வீட்டில் இல்லாத நிலையில் ரத்தினத்தின் மனைவி செல்வி மட்டும் வீட்டில் இருந்தார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை குறித்த விளக்கங்களை கூறி, முக்கிய சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளனர். இதேபோல் சென்னை தி.நகர் ஜி.என் செட்டி சாலையில் உள்ள ரத்தினம் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தில் உள்ள திண்டுக்கல் ரத்தினத்தின் நண்பரான மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரனின் வீடு, உறவினர் வீடு ஆகிய இடங்களில் சி.ஆர்.பி.எப் போலீஸ் பாதுகாப்போடு அமலாக்கத்துறை காலை 11 மணி முதல் சோதனையை நடத்தினர். இதில் ஏற்கனவே நடைபெற்ற இந்த சோதனையில் தொடர்ச்சியாகவே இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் இரண்டரை மணி நேரத்தில் இந்த இரண்டு இடங்களிலும் சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது ராமச்சந்திரன் இல்லத்திலிருந்து சில ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

The post தொழிலதிபர், கான்ட்ராக்டர் வீடுகளில் இ.டி. சோதனை appeared first on Dinakaran.

Related Stories: