சென்னை, கே.கே.நகரில் உள்ள டாக்டர் ராமசாமி சாலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய கட்டிட திறப்பு விழா அந்த அமைப்பின் தலைவர் விக்கிராமராஜா தலைமையில் இன்று காலை நடைபெற்றது. தெலங்கானா ஆளுநரும், புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு குத்துவிளக்கை ஏற்றிவைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஆச்சி மசாலா நிர்வாக இயக்குநர் பத்மசிங் ஐசக், எஸ்.என்.ஜே நிர்வாக இயக்குநர் எஸ்.என். ஜெயமுருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் வணிகர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் பேரமைப்பின் கொடியை பொருளாளர் சதகத்துல்லா ஏற்றி வைத்தார். புதிய கட்டிடத்தில் பா.சிவந்தி ஆதித்தனார் வளாக கட்டிடத்தை லெஜன்ட் குழும தலைவர் சரவணன் திறந்து வைத்தார். யோகரத்தினம் லெஜன்ட் சரவணா வளாகத்தை கோகுலம் நிறுவன தலைவர் கோகுலம் கோபாலனும், சிட்டி யூனியன் வங்கி அரங்கத்தை சிட்டி யூனியன் முதன்மை செயல் அதிகாரி காமகோட்டியும் திறந்து வைத்தனர். பேரமைப்பின் அலுவலகத்தை போத்தீஸ் குழும நிர்வாக இயக்குனர் ரமேஷ், பேரமைப்பின் ஹட்சன் அர்கோ நிர்வாக இயக்குநர் சந்திரமோகன் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு மலரை ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட அதனை தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் பெற்றுக்கொண்டார். நலிந்த வணிகர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தினை வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.
The post சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய கட்டிட திறப்பு விழா: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.