சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த 7 விளையாட்டு வீரர் – வீராங்கனைகளுக்கு ரூ.3.80 கோடி உயரிய ஊக்கத்தொகையும், போட்டிகளில் பங்கேற்ற 11 விளையாட்டு வீரர் – வீராங்கனைகளுக்கு ரூ.22 லட்சம் ரூபாயும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (3.11.2023) சென்னை முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், சீனா நாட்டின் ஹாங்சூவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த 7 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 3 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற 11 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் – அறக்கட்டளை சார்பில் 22 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கி வாழ்த்தினார்.

சீனா நாட்டின் ஹாங்சூவில் கடந்த 22.10.2023 முதல் 28.10.2023 வரை நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 7 விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 11 வெண்கலம், என மொத்தம் 15 பதக்கங்களை வென்றனர். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த – பாரா தடகளப் போட்டியில் 1 தங்கப் பதக்கம் வென்ற டி.சோலைராஜ், 1 வெள்ளிப் பதக்கம் வென்ற டி. மாரியப்பன் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற முத்து ராஜா, பாரா பேட்மிண்டன் போட்டியில் 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கங்கள் வென்ற எம். துளசிமதி, 3 வெண்கலப் பதக்கங்கள் வென்ற மனிஷா ராமதாஸ், 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற சிவராஜன் சோலைமலை, 3 வெண்கலப் பதக்கங்கள் வென்ற எஸ். நித்யா ஸ்ரீ சுமதி ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையாக 3 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்து மீனா, பி. மனோஜ், மனோஜ் குமார். ஷேக் அப்துல்காதர், ஆர். பாலாஜி, ஷிரந்தி தாமஸ், ஆர். ருத்திக், வி. சந்தியா, ஆர். கனிஷ்ஸ்ரீ பிரேமா. ஷரோன் ரேச்சல் அபி மற்றும் ஆர். கஸ்தூரி ஆகிய 11 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை” சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 22 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., முதன்மை நிர்வாக அலுவலர் வே. மணிகண்டன் மற்றும் பொது மேலாளர் மெர்ஸி ரெஜினா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு வரவேற்பு; சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 7 வீரர் வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்கள் இன்று (03.1.2023) காலை சென்னை. மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

The post சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: