டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: உடுமலையில் கிராம மக்கள் சாலை மறியல்

உடுமலை: உடுமலை அருகே புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்து தாராபுரத்தில் இருந்து பெரிய பட்டி, மூங்கில் தொழுவு பிரிவு, வீதம் பட்டி, நெகமம் செல்லும் மெயின் ரோட்டில் வி.வேலூர் சுமைதாங்கி பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இதையறிந்த பொது மக்கள் அப்பகுதியில் அரசு பள்ளி, கல்வி நிறுவனங்கள் இருப்பதாலும், புறநகர் பைபாஸ் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாலும், இங்கு டாஸ்மாக் கடை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கிராம மக்களின் எதிர்ப்பை மீறி அப்பகுதியில் மது கடை திறப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வந்தன. இதை கண்டித்து இன்று வி.வேலூர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று கிராம பொதுமக்களும் ஒரே இடத்தில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காலை 9 மணிக்கு துவங்கிய மறியல் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த உடுமலை டிஎஸ்பி சுகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மது கடையால் ஏழை எளிய குடும்ப பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும், மது கடையை திறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: உடுமலையில் கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: