சேறும் சகதியுமாக மாறிய காட்டேரி வில்லேஜ் – முட்டிநாடு சாலை

*பொதுமக்கள், விவசாயிகள் அவதி

ஊட்டி : ஊட்டி அருகே உள்ள காட்டேரி வில்லேஜ் – முட்டிநாடு சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டி அருகேயுள்ள அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட காட்டேரி வில்லேஜ், செல்வீப் நகர், கோலனிமட்டம் போன்ற கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மக்கள் ஊட்டி மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல காட்டேரி வில்லேஜ் – முட்டிநாடு சாலையை பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல், இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விைளவிக்கும் காய்கறிகளை மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு கொண்டுச் செல்லவும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பள்ளி மாணவர்களும் இச்சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மழைக்காலங்களில் இச்சாலை பழுதடைவது மட்டுமின்றி சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், இச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இச்சாலையோரங்களில் போதுமான மழை நீர் கால்வாய் அமைக்கப்படாததாலும், விவசாய நிலங்களை ஒட்டியுள்ள சாலைகளில் தடுப்பு சுவர் இல்லாததாலும் விவசாய நிலங்களில் இருந்து அடித்து வரப்படும் மண் சாலையில் தேங்கி சாலை முழுக்க சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.

இதனால், இச்சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் மாணவர்கள் நடந்து செல்ல முடியவில்லை. எனவே, பேரூராட்சி நிர்வாகம் இச்சாலையை சீரமைப்பது மட்டுமின்றி, சாலையோரங்களில் மழை நீர் செல்ல ஏற்றவாறு மழை நீர் வடிகால்கள் அமைக்க வேண்டும். சாலையில் உள்ள சேற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post சேறும் சகதியுமாக மாறிய காட்டேரி வில்லேஜ் – முட்டிநாடு சாலை appeared first on Dinakaran.

Related Stories: