சொத்து குவிப்பு வழக்கில் ஓபிஎஸ் விடுதலைக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை:2001-2006ம் ஆண்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்ததாக 2006ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை மதுரை நீதிமன்றத்தில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றி 2012ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.இந்த நிலையில் மீண்டும் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடர்வதற்காக அளித்த அனுமதியை திரும்பப் பெற்று அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 2012ல் உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அப்போது, அவர்களுக்கு வழக்கின் ஆவணங்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நவம்பர் 23ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தார்.

The post சொத்து குவிப்பு வழக்கில் ஓபிஎஸ் விடுதலைக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: