மஞ்சங்காரணையில் சேதமடைந்த பயணியர் நிழற்குடை

 

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் மஞ்சங்காரணை, கூரம்பாக்கம், காடாநல்லூர் என 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேலை சம்பந்தமாகவும், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லவும் மஞ்சங்காரணையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து பெரியபாளையம், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு செல்வார்கள். அவ்வாறு செல்லும் பயணிகளுக்கு பேருந்து நிலையமோ அல்லது பயணியர் நிழற்குடையோ இல்லாத நிலை இருந்தது.

இதனால் பயணிகள் வெட்ட வெளியில் கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 2016-17ம் ஆண்டு ரூ.5 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த பயணியர் நிழற்குடையில் உள்ள இரும்பு இருக்கைகள் உடைந்து, சேதம் ஏற்பட்டு, அதன் தகடுகள் பயணிகளை பதம் பார்க்கிறது. அந்த இருக்கைகளும் மாயமாகி விட்டது. நிழற்குடையின் மேற்கூரை மீதும், அதை சுற்றியும் செடி கொடிகள் படர்ந்து புதர்களாக காட்சியளிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு மஞ்சங்காரணை பகுதியில் பயணியர் நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மஞ்சங்காரணையில் சேதமடைந்த பயணியர் நிழற்குடை appeared first on Dinakaran.

Related Stories: