சென்னை-டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: பயணிகள் அவதி

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு, டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. விமானத்தில் 164 பயணிகள் டெல்லி செல்வதற்காக, பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். இந்நிலையில், விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதனால் பயணிகள் விமானத்தில் ஏற்றப்படவில்லை. தொடர்ந்து விமானம் தாமதமாக காலை 8 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் விமான இயந்திரங்களை பழுது நீக்கும் முயற்சியின் ஈடுபட்டனர்.

ஆனால் காலை 8 மணிக்கும் விமானம் புறப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், ஏர் இந்தியா ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பயணிகளை சமாதானம் செய்து, காலை 9 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்று விடும் என்று கூறினர். மேலும் விமானத்தில் கோளாறு சரி செய்யப்படாததால், காலை 9 மணிக்கும் விமானம் புறப்படவில்லை. இதையடுத்து பயணிகள் மீண்டும் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பயணிகளை அமைதிப்படுத்திய அதிகாரிகள், பயணிகளை மாற்று விமானங்களில் டெல்லிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி சென்னையில் இருந்து டெல்லி செல்லவிருக்கும் மற்ற விமானங்களில் பயணிகளை அனுப்பி வைத்தனர். இதனால் சென்னையில் இருந்து டெல்லி செல்ல வந்த 164 பயணிகள் 3 மணி நேரத்திற்கு மேலாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.

The post சென்னை-டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: