குணசீலத்தில் பிரம்மோற்சவ விழா சேஷ வாகனத்தில் பெருமாள் வீதிஉலா

 

முசிறி, செப்.23: குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் திருநாளான நேற்று பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். முசிறி அருகே குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் வைணவ கோயில்களில் பிரசித்தி பெற்றதாகும். திருப்பதிக்கு சென்று வணங்கினால் கிடைக்கும் சுவாமியின் அருள் குணசீலம் பெருமாள் கோயிலை வணங்கினால் கிடைக்கும் என்று கருதப்படுவதால் இது தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று பிரசன்ன வெங்கடாஜலபதி சேஷ வாகனத்தில் எழுந்தருளி வாகன மண்டபத்தில் காட்சியளித்தார். அங்கு கும்ப தீபாராதனைக்கு பிறகு வெளிபிரகாரங்களில் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலாவந்து சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகிற 26ம்தேதி நடைபெறுகிறது.

The post குணசீலத்தில் பிரம்மோற்சவ விழா சேஷ வாகனத்தில் பெருமாள் வீதிஉலா appeared first on Dinakaran.

Related Stories: