ஈரோடு: ஈரோட்டில் போலி ஆவணங்கள் மூலம் 50 சென்ட் நிலம் மோசடி செய்த விவசாயியை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ராஜ் (64). விவசாயி. இவருக்கு சொந்தமான 50 சென்ட் தாளமடை கிராமத்தில் உள்ளது. இந்நிலத்துக்கு அருகிலேயே சின்னியம்பாளையத்தை சேர்ந்த பழனிவேல் (65) என்பவரின் நிலமும் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராஜூக்கு பணம் தேவைப்பட்டது. இதனால் தனது நிலத்தை பழனிவேலிடம் அடமானம் வைத்து ரூ.85 ஆயிரத்தை பெற்று உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜூக்கு சொந்தமான நிலத்தில் பழனிவேல் குழி தோண்டி உள்ளார். அதை தட்டி கேட்க ராஜ் சென்றபோது, தனது நிலத்தை குழி தோண்டுவதாக அவர் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ், பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று விசாரித்தபோது ராஜூக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பழனிவேலின் மகனுக்கு கிரையம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜ் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஜவகரிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி ஜவகர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலி ஆவணம் தயாரித்து ராஜூக்கு சொந்தமான நிலம் கிரயம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பழனிவேலை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இந்த வழக்கில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை கிரையம் செய்ததற்கு வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நில மோசடியில் ஈடுபட்ட விவசாயி கைது appeared first on Dinakaran.