கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உண்மை விரைவில் வெளிவரும்: டிடிவி.தினகரன் பேட்டி

கும்பகோணம்: ‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை விரைவில் வெளிவரும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி: கொடநாடு, கொலை மற்றும் கொள்ளை வழக்கில் போலீசார் உண்மை குற்றவாளிகளை தற்போது 70 சதவீதம் நெருங்கி விட்டனர். இதுகுறித்த உண்மை விரைவில் வெளியாகும். அப்போது இதில் யார் யாருக்கு தொடர்புள்ளது என்று தெரிய வரும். இவ்வழக்கின் குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாடு மக்களின் எண்ணமும், கோரிக்கையும். அது விரைவில் நிறைவேறும்.
சனாதனத்திற்கு மட்டுமல்ல, அம்மாவின் மறைவிற்கு பிறகு, அதிமுகவிற்கு பணம், பதவியை தவிர வேறு எந்த நிலைப்பாடும் எதற்கும் இல்லை.

கட்சியின் சின்னமும், பெயரும் அவர்களிடம் உள்ளதால், அதை வைத்து தொண்டர்களையும், பணபலத்தை கொண்டு கட்சி நிர்வாகிகளையும் தங்கள் பக்கம் வைத்துள்ளனர். எல்லாவற்றுக்கும் காலம் தான் மருந்து. அது விரைவில் வரும். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அமமுக தனது நிலைப்பாட்டை நவம்பர் அல்லது டிசம்பரில் அறிவிக்கும். தற்போது பெரும்பான்மை நிர்வாகிகளும், தொண்டர்களும், எடப்பாடி இருக்கும் அணியில் இடம் பெறக்கூடாது என கூறி வருவதால் அதனை மனதில் வைத்து முடிவு செய்யப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. எனவே பெண் அர்ச்சர்கள் அதில் இடம் பெறுவதும் வரவேற்கத்தக்கதுதான். இவ்வாறு அவர் கூறினார்.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உண்மை விரைவில் வெளிவரும்: டிடிவி.தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: