கட்சி, ஆட்சியை கட்டுக்கோப்புடன் நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் கலைஞரின் உருவாகவே காட்சியளிக்கிறார்: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார் அறிக்கை

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் இன்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவராக பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து, ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஐந்தாண்டு காலத்தில் அவர் சந்தித்த சோதனைகள் அதனை சாதனைகளாக மாற்றிய சாதூர்யம், கட்சியையும், ஆட்சியையும் கட்டுக்கோப்புடன் நடத்தி வரும் பாங்கு, கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து, அரவணைத்து செல்லும் விதம், இவை அனைத்தும் கலைஞரின் உருவாகவே மு.க.ஸ்டாலின் காட்சியளிக்கிறார். இந்த தமிழ் மண்ணுக்கு, தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழிக்கு எப்போதெல்லாம் துரோகம் எந்த திசையில் இருந்து வந்தாலும் அதை எதிர்த்து நிற்கிற தைரியம், துணிச்சல் திமுகவிற்கு எப்போதும் உண்டு என்பதை மு.க.ஸ்டாலின் தலைமையிலும் நிரூபித்து காட்டப்பட்டுள்ளது.

ஒன்றிய பாஜக ஆட்சியை கண்டு பல்வேறு மாநிலங்கள் மிரண்டு கிடந்த நிலையில் ஒன்றிய அரசின் தவறான, ஜனநாயக விரோத, சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான செயல்பாடுகளை சம்மட்டி கொண்டு அடித்து சனாதான சக்திகளை எதிர்த்து நின்றவர் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை பார்த்த பிறகு தான் இந்திய அளவில் பல்வேறு தலைவர்களுக்கு ஒரு நம்பிக்கையும் தைரியமும் ஏற்பட்டது. அதனுடைய விளைவுதான் இன்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கிற இந்தியா கூட்டணி என்பதை எவரும் மறந்திட முடியாது. ஆகவே மாநில அளவிலும், ஒன்றிய அளவிலும் ஜனநாயகத்தை காக்கவும் சமூக நல்லிணக்கத்தை பேணவும்; இன, மொழி, மண்ணைக் காக்கவும் உயர்ந்து நிற்கக்கூடிய சிறந்த தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். 6ம் ஆண்டின் அடியெடுத்து வைத்துள்ள அவரை விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி வாழ்த்தி வரவேற்கிறது. அவருடைய பணித் தொடர, வெற்றிகளைக் குவித்திட அவருக்கு பக்கபலமாக இருந்து பணியாற்றுவோம்.

The post கட்சி, ஆட்சியை கட்டுக்கோப்புடன் நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் கலைஞரின் உருவாகவே காட்சியளிக்கிறார்: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: