கூத்தூர் கிராமத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

 

பாடாலூர், ஆக.25: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கூத்தூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் பொதுமக்களுக்கு சென்று சேர்க்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தினந்தோறும் கிராம ஊராட்சிகளில் வீடியோ படக்காட்சிகள் நடத்துதல், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கலெக்டர், எம்எல்ஏக்கள் கலந்து கொண்ட அரசு விழாக்களின் தொகுப்பாக சிறு புகைப்படக் கண்காட்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூத்தூர் ஊராட்சியில் நேற்று முன்தினம் (23ம்தேதி) நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்ட கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்படக் கண்காட்சியினை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். பார்வையிட்டவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

The post கூத்தூர் கிராமத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: