பெரம்பலூர்,ஜன.7: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடக்கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 2வது நாளாகக் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் எஸ்எஸ்டிஏ சார்பாக கடந்த டிசம்பர் மாதம் 26ஆம்தேதி முதல் சம வேலைக்கு சமஊதியம் வழங்கிடக் கோரி சென்னையில் ஊதிய மீட்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதற்கான தீர்வுகள் இதுவரை எட்டப்படாததால் 5ஆம் தேதி முதல் சென்னை மட்டுமன்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பும் காத்திருப்புப் போராட்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டது. இதன்படி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு 5ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட இடை நிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக தொடங்கிய காத்திருப்புப் போராட்டம்,
நேற்று 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. இந்தக் காத்திருப்புப் போராட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தேவகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நல்லதம்பி, மாவட்ட துணைத் தலைவர் கோதண்டராமன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என 16-பெண்கள் உள்பட 27 பேர் கலந்து கொண்டனர்.
